#013. பூத்தவளே புவனம்

# 13. பிறரைத் தொழேன்!

பூத்தவளே புவனம் பதினான்கையும்! பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்துப் பின் மறைக்கின்றவளே! நீலகண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூப்பு அடையாத மாலுக்கு இளையவளே! மா தவம் உடையவளே! உன்னை விட்டு வேறு ஒரு தெய்வத்தை நான் வணங்குவேனோ?