#043. பரிபுரச் சீறடி

# 43. செம்பாகத்தில் இருப்பவள்.

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்ச பாணி இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில்
புரிவர வஞ்சரை அஞ்சக்குனி பொறுப்புச்சிலைக் கை
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

சிலம்புகள் அணிந்த சீரிய திருவடிகளையும், அங்குச பாசங்களையும், ஐந்து கணைகளையும் உடையவள். இனிய சொல் வழங்கும் திரிபுர சுந்தரி. அவள் சிவந்த மேனியள். தீய நெஞ்சம் படைத்த முப்புரத்தாரை அழிக்க மேரு மலையினை வில்லாக ஏந்திய திருக்கரத்தையும், நெருப்பு வண்ண மேனியையும் உடைய சிவபிரானின் செம்பாதியில் வீற்று இருக்கும் நம் அம்பிகை.