#028. சொல்லும் பொருளும்

# 28. அடியவர் அடையும் பேறுகள்

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே, அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும், சிவலோகமும் சித்திக்குமே!

சொல்லும் பொருளும் போல, நடனம் ஆடும் ஈசனுடன் இணைந்துள்ள, நறுமணம் கமழும் பூங்கொடியே! இரவும், பகலும், உன் புதுமலர் போன்ற அடிகளைத் தொழும் அன்பர்களுக்கே அழியாத அரசும், தவ ஒழுக்கமும், சிவலோகமும் சித்திக்கும்.