# 72. யார் குறை சொல்!
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கில்
நின் குறையே அன்றி யார் குறை காண்? இருள் நீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்!
தன்குறை தீர, எம்கோன் சடைமேல் வைத்த தாமரையே.
நீண்டு அகன்ற வானில் தோன்றும் மின்னலைக் காட்டிலும் மெல்லிடை வாய்க்கப் பெற்ற தேவியே! எம்பிரான் தம்முடைய குறைகள் தீரத் தம் சடைமேல் வைத்துப் போற்றிய உன் தாமரைத் திருவடிகளை யானும் என்னுடைய குறைகள் தீரும் வண்ணம் வைத்துப் போற்றுகின்றேன். இனியும் நான் பிறவி எடுக்க நேர்ந்தால் அது உன்னுடைய குறையே அன்றி வேறு யாருடைய குறை?