#085. பார்க்கும் திசைதொறும்

# 85 . எங்கும் உன் உருவெளியே!

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்; பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே.

பார்க்கின்ற திசைகளில் எல்லாம் அங்குச பாசமும், வண்டுகள் மொய்த்து ரீங்கரிக்கும் ஐந்து புது மலர்க் கணைகளும், அழகிய கரும்பு வில்லும் கொண்டு, என் துன்பம் எல்லாம் தீர்க்கின்ற திரிபுர சுந்தரியின் அழகிய வடிவும், நுண்ணிய இடையும், கச்சை அணிந்த குங்குமக் கலசங்களும், அவற்றில் மேல் விளங்கும் முத்து மாலைகளுமே காட்சி தருகின்றனவே!