#058. அருணாம்புயத்தும்

# 58. தஞ்சம் இல்லை.

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகைசேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே!

செந்தாமரையிலும், என் உள்ளத்தாமரையிலும் வீற்று இருக்கும்; தாமரை மொட்டுக்களை ஒத்த நகில்களை உடைய தேவியின்; கருணை பொழியும் தாமரை விழிகளையும், தாமரை முகத்தினையும், தாமரைக் கரங்களையும், தாமரைத் திருவடிகளையும் அன்றி வேறு ஒரு தஞ்சம் நான் கண்டதில்லையே!