#016. கிளியே! கிளைஞர்

# 16. நின் கருணை விந்தையன்றோ? 

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

பசுங்கிளியே! உன் அன்பர் உள்ளத்தில் வீசுகின்ற ஒளியே! ஞான ஒளியான சிவபிரானின் திருமேனியில் இடம் பெற்றவளே! ஆராய்ச்சியில் அடங்காத வெட்ட வெளியே! ஐந்து பூதங்களாகப பரந்து விரிந்தவளே! இத்தனை பெருமைகளையும் சுருக்கிக் கொண்டு , எளியேன் என் சிற்றறிவினால் அளப்பதற்கு அளவாகக் குறைந்தது ஒரு விந்தையன்றோ?