#018. வவ்விய பாகத்து

# 18. காத்தருள வேண்டும்!

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும்,உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என்மேல் வரும் போது வெளி நிற்கவே.

உன்னால் கவரப்பட்ட இடப் பாகத்தை உடைய இறைவனும் நீயும் இணைந்து விளங்கும் அர்த்த நாரீஸ்வரர் வடிவமும், உங்கள் திருமணக் கோலமும், என் பற்றுக்களை அகற்றி ஆட்கொண்ட உன் பொற்பாதங்களும் , கொடிய காலன் என்னை நெருங்கும் போது என் முன்னே காட்சி தர வேண்டும் தாயே!