#092. பதத்தே உருகி

# 92. புறம் தொழேன்!

பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்
முதத் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே.

மும்மூர்த்திகளும், தேவர்களும், மற்றவர்களும் போற்றி வணங்கும் புன்னகையின் நாயகியே! என் மனம் பக்குவமாக உருகி, உன் திருவடிகளின் மீது பற்று வைத்து, உன் அருள் நெறிலேயே ஒழுகுமாறு, என்னை உன் அடிமை ஆக்கி விட்டாய். ஆகையால் நான் மற்றவர்கள் மதத்தில் மதி மயங்கவும் மாட்டேன். அவர்கள் வழியைப் பின் பற்றவும் மாட்டேன்.