#081. அணங்கே! அணங்குகள்

# 81 . வஞ்சகரோடு இணங்கேன்.

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என் கண் நீ வைத்த பேர் அளியே!

என் தெய்வமே! மற்ற தெய்வங்கள் உன்னுடைய பரிவாரங்கள் ஆவதனால், அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். வாழ்த்தவும் மாட்டேன். வஞ்சக நெஞ்சம் படைத்தவரோடு இணங்கவும் மாட்டேன். தன்னுடையவை எல்லாம் உன்னுடையது என்று வாழுபவர்களோடு நான் பிணங்கவும் மாட்டேன். அறிவு என்பதே இல்லாத என் மேல் நீ வைத்துள்ள பேரருள் தான் எத்தனை!