#096. கோமளவல்லியை

# 96. தொழுபவர் எய்தும் பயன்.

கோமளவல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

மென்கொடி போன்றவள்; அல்லித் தாமரைக் கோயிலில் வீற்று இருக்கும் யாமளவல்லி; மாசற்றவள்; வரைந்து காட்ட முடியாத பசுமையான திருமேனியை உடையவள்; சகல கலைகளின் அதிபதியான அழகிய மயில்; இத்தகைய அபிராமி அன்னையைத் தம்மால் முடிந்த அளவு தொழுது வழிபடுபவர்கள், ஏழு உலகங்களுக்கும் அதிபதிகள் ஆவார்.