#088. பரம் என்று உனை

# 88 . என்னை ஒதுக்கிவிடாதே! 

பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம்
புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப்பாகம் சிறந்தவளே.

முன்னாள் பகைவரின் முப்புரத்தை எரிப்பதற்கு மேரு மலையையே வில்லாக வளைத்தவனும்,பிரமதேவனின் ஒரு தலைக் கிள்ளிய கரத்தை உடையவனும் ஆகிய சிவனுடைய இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் அன்னையே! நீயே பரம் பொருள் என்று உன்னைச் சரண் அடைந்துள்ளேன். இவன் என் அன்பனாகும் தரம் இல்லாதவன் என்று எண்ணி என்னைத் தள்ளிவிடாதே.