அபிராமி அந்தாதி

திரு அபிராமிப் பட்டர் சோழ நாட்டில், 18 வது நூற்றாண்டின் பிற்பகுதியில், அந்தணர் குலத்தில் பிறந்தவர். திருக்கடவூரில் வாழ்ந்தவர்.  இவர் தமிழ் மொழி, வடமொழிப் புலமையும், நல்ல ஒழுக்கமும், இறை பக்தியும் கொண்டு இலங்கினார். தம் குல தெய்வமான அபிராமி அம்மையிடம் அளவற்ற பக்தி கொண்டவர். அவள் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்.

நல்லவர்களை உலகம் நிம்மதியாக வாழவிடுமா? பொறாமையால் பீடிக்கப்பட்ட சில அந்தணர்கள் இவரைப் பற்றி குறை கூறித் திரிந்தனர். சரபோஜி மகாராஜா ஒரு தை அமாவாசை அன்று திருக்கடவூர் கோவிலுக்கு வந்தார்.

கோள் கூறுபவர்களுடைய கூற்றை ஆராயவேண்டி, பட்டரிடம் அரசன் அன்றைய திதியைக் கேட்டான். அம்மையின் அருள் ஒளி உள்ளத்தில் நிறைத்து வைத்திருந்த பட்டர் பௌர்ணமி திதி என்ற பதில் அளித்து விட்டார். அமாவாசையைப் பௌர்ணமி என்ற கூறக் கேட்ட மன்னன் அளவற்ற கோபம் கொண்டான்.

அரசன் தனக்கு தண்டனை தருமுன்னர் தானே தனக்கு தண்டனை அளித்துக் கொள்ள எண்ணினார் பட்டர். ஒரு நெருப்பு குண்டம் அமைத்து அதற்கு மேல் நூறு கயிறுகளால் தாங்கப்படும் உறியை அமைத்து அதன் மீது அமர்ந்து கொண்டு நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடினார்.

ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக வெட்டினார். அவர் 79 வது பாடல் ஆகிய ‘விழிக்கே அருள் உண்டு’ என்ற பாடலின் முடிவில் தேவி தன் காதணியைச் சுழற்றி வீசவே, வானில் பூரண நிலவின் ஒளி வீசியது!

எஞ்சிய பாடல்களையும் பாடுமாறு அன்னை பணிக்கவே, பட்டரும் நூறு பாடல்களையும் பாடி முடித்தார். தன் தவற்றை உணர்ந்த மன்னன் மன்னிப்புக் கோரி, அவரை வணங்கி, அவருக்கு ‘அபிராமிப் பட்டர்’ என்ற பட்டதையும் வழங்கினான்.
கணபதி துதியையும், நூற்பயனையும் சேர்த்து 102 பாடல்கள் கொண்ட இந்தத் தொகுதியைக் காண்போம்.

அபிராமி அன்னையையும், அபிராமிப் பட்டரையும் வணங்கி இத்தொடரைத் தொடங்குகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.